Search This Blog

Thursday, March 8, 2018

உலக தாய்மொழி தினம்





உலக தாய்மொழி தினம் (21.02.18)

என் உயிரில் கலந்த கருவே
கன்னியாகுமரியின் திருவே
குமரிக் கண்டத்தின் பிறப்பே
கூடலில் கலந்த உறவே
தொன்மையான தெளிவே
தோற்றம் பல கொண்ட தேவே
சங்கம் வளர்த்த மதுரையே
சாமானியனையும் வசப்படுத்திய வாழ்வியலே
இரண்டடியில் உலகாள்பவளே
இன்பத்துப் பாலையும் தந்தருளிய தாட்சாயினியே
இலக்கண இலக்கிய வரையரை கொண்டவளே
இயல் இசை நாடகத்தை தன் வசமாக்கியவளே
நாடே போற்றும் நல்லவளே
நாமகளின் மூத்தவளே
உடல் பொருள் ஆவி என்றானவளே
ஊடலையும் கூடலையும் ஒருங்கிணைத்தவளே
பெரிய புராணத்தைத் தந்தருளிய பேரின்பமே
பேச்சாற்றலை வளர்க்கும் மொழியாற்றல் கொண்டவளே
சங்கப் பாட்டாய் சங்கமித்தவளே
சமரசக் கருத்துகளை முன்மொழிந்தவளே
குறுந்தொகையாய் குறுகித் தரித்தவளே
கூல வாணிகத்தின் அடைமொழியே
தலைவனுக்குத் தோழியாய் நின்றவளே
தலைவியை தூது சென்று ஆற்றுப்படுத்தியவளே
ஐம்பெருங்காப்பியமாய் ஆராதனை செய்பவளே
ஐங்கரனின் அன்னையாய் மிளிர்ந்தவளே
அகத்தியனின் அருள் வாக்கில் நின்றவளே
அதிவீரராம பாண்டியனாய் களை எடுக்க வந்தவளே
ஆற்றுப்படை நூலில் அழகாய் அலர்ந்தவளே
ஆயகலைகள் அனைத்தையும் அழகியலில் அருளியவளே
பரணியாய்ப் பார் புகழப் பிறந்தவளே
பாணனின் வாழ்வியலைச் செம்மைப்படுத்தியவளே
நாலடியாய் நறுந்தேனைத் தெளித்தவளே
 நால்வகைப் பாக்களை நாவினில்  நவின்றவளே
ஐங்குறுநூற்றின் ஐராவதம் நீயே
ஐம்புலன்களை அடக்கி ஆள வைக்கும் அசரீரியும் நீயே
பண்பாட்டின் நாயகியே
பாட்டியலைத் தந்தவளே
மூவேந்தர்களின் திறம் போற்றியவளே
முக்கூடல் பள்ளாய் மின்னியவளே
எட்டுத்தொகையைக் கொண்டவளே
ஏலாதி மாமருந்தாய் மலர்ந்தவளே
\பத்துப்பாட்டாய் பல கதையாய் நின்றாய்
பாஞ்சாலியாய் உன்னை உருவகப் படுத்திவிட்டாய்
கம்பனையும் கபிலனையும் கவிஞனாக்கினாய்
கார் நாற்பதாய் கார்மேகமாய் காட்சி தந்தாய்
அகம் புறமென நீ ஆண்டாலும்
அகத்தே கருத்தே புறத்தே உள்ளோரை
புதுமொழிகள் கொண்டு புத்துயிர் பெறச்செய்தாய்
சாதி மத இனங்களைக் கடந்தவளும் நீ
சாத்திரங்கள் பல கொண்ட நற்சான்றிதழும் நீ
கலியாய் துள்ளினாய்; காவடியாய் சிந்து பாடினாய்
ஆண்டாண்டுகள் சென்றாலும் ஆயிரத்தில் ஒருவள் நீ
ஆதிசேஷனின் தலைவியும் நீ
மறுமலர்ச்சியாய் மலர்ந்தவளும் நீ
மாற்றம் ஒன்றே மாறாதவளும் நீ
செம்மொழியாய் இருப்பவளும் நீ
செம்மார்ந்து செழித்தோங்கச் செய்பவளும் நீ
உன்னை எண்ணி எழுத்துகள் உருண்டோடுகிறது
ஏக்கப் பெருமூச்சோடு என் மனம் மறுக்கிறது
நிறுத்தத் தடை செய்கிறது;
 நித்தமும் உன் மணம் பரப்பும் என்கிறது
இன்றோடு முடியவில்லை என் எழுத்துரு
எண்ணமாய் என்னுருவில் வண்ணமித்துள்ளாய்
வகை வகையாய் வசமாக்குகிறேன்..
வானளாவிய உம் புகழை...\
வாழும் காலம் வரை அல்ல.....
நீ வாழும் காலம் வரை...
வாழிய செந்தமிழ்!! வாழிய நற்றமிழ் !!! வாழிய வாழியவே!!!!

சித்ரகலா கலைச்செல்வன்


No comments:

Post a Comment

Translate