தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
எழுத்து இலக்கண வகைகள்:
1. முதலெழுத்து
2. சார்பெழுத்துகள்
முதலெழுத்துகள்
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
* உயிரெழுத்துகள்:
உயிரெழுத்துகள் 12 அவை:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ
நெடில்
நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
* மெய்யெழுத்துகள்:
மெய்யெழுத்துகள் 18 அவை:
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:
வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
சார்பெழுத்துகள்
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன.
சார்பெழுத்து பத்து வகைப்படும் அவை:
1. உயிர்மெய் எழுத்து
2. ஆய்த எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்