Search This Blog

Thursday, January 5, 2012

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -15


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


                               அவ்வப்போது "எம்பெருமான்" என்று சொல்லிச் சொல்லி, நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல் எப்போதும் உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையான கண்ணீரில் தோய்ந்து, (இறைவனையே எண்ணி எப்போதும் அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை ! வேறு தேவர்களை இவள் பணிவதில்லை ! பேரரசனாகிய இறைவன்பால் இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும் வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி, கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே, நாம் நேர்த்தியான, மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !


ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்; பார் - உலகம்; அரையர் - அரசர்.

No comments:

Post a Comment

Translate