Search This Blog

Monday, January 9, 2012

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -17


செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

                வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே ! சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும், தேவர்களிடமும் எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு, நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத் தந்தருள் செய்யும் தொழில் உடையவனை, அழகிய கண்களை உடைய நம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை, நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்த இந்நீரில் பாய்ந்தாடுவோம் !


கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி; சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை.

No comments:

Post a Comment

Translate