Search This Blog

Sunday, July 3, 2011

வாழ்த்துரை


சென்னை வாழ் வெங்கடேஸ்வரபுரம்
சமுதாய முன்னேற்ற சங்கம்
 தொடக்க விழா
26/06/2011
வாழ்த்துரை
                வணக்கம்,
                        சங்கம் என்றால் சங்கமித்தல்,
                        சனங்கள் எல்லாம்
                        சகல சங்கதிகளையும், சந்தோசத்தையும்
                        வெளிப்படுத்துதல், ஒருமுகப்படுத்துதல்
                        ஒன்று கூடுதல், இணைதல்.....
                ஆம்! நாம் இன்று சங்கமித்துள்ளோம்!!!...

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்ந்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்ந்த வாவினையேன் நெடுங்காலமே
-      இராமலிங்க அடிகள்
அதாவது, நல்ல உடம்பையும், பொறி புலன்களையும் தந்த இறைவனைத் தவறாது வாழ்த்தவும், வணங்கவும் வேண்டும் என்பது போல, சமுதாய நோக்கோடு தொடங்கியிருக்கும் இந்த முன்னேற்றச் சங்கத்திற்கு எனது வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
        புகழ்ந்தாரைப் போற்றி வாழ்!
        பெரியாரைத் துணைக் கொள்!
-      ஔவையார்.
என்ற ஔவையின் வாக்கிற்கிணங்க, சான்றோர்களைப் போற்றி அவர்களது வழியில் நடக்கும் தொண்டுள்ளங்களையும், சிறப்பு அழைப்பாளர்களையும் வாழ்த்துகிறேன்.
மக்கட் தொண்டே மகேசன் தொண்டு
உழுவாரப் பணியே உயர் பணி
-      நாவுக்கரசர்
என்ற நாவுக்கரசர் வழியில் தொண்டாற்ற விழைந்திருக்கும் அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துகிறேன்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
-      திருவள்ளுவர்
என்ற மனத்துணிவுடன், முயன்றால் முடியாதது எதுவுமில்லை; முயற்சி திருவினையாக்கும் என்ற முதுமொழிக்கேற்ப நமது சங்கத்தை மேலும் முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல என் முதல் வாழ்த்துதலை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
        வித்தகம் பேச வேண்டாம்;
        பணி செய்ய வேண்டும்.
-      சேக்கிழார்
என்ற சேக்கிழாரின் கூற்று போல், தாங்கள் ஆற்றுகின்ற இப்பணியானது தன்னலமற்றதாகவும், புகழ்ச்சியை விரும்பாததாகவும் இருக்க மீண்டும் வாழ்த்துகிறேன்.
மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு டைத்து.
-      திருவள்ளுவர்.
என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கேற்ப, மனத் தளர்ச்சி அடையாது, செய்யும் பணியை மேலும் நிறைவுறச் செய்ய வாழ்த்துகிறேன்.
விதியுண்டென்று சொல்ல வேண்டாவே
முடியின் முற்றாத தொன்றுமில்லை
விதியினும், முயற்சிக்கு முன்னுரிமை கொடுத்து வெற்றியின் பயனை மேலும் அடைய வாழ்த்துகிறேன்.
சமுதாயம் என்பது ஒற்றுமை, பாசம், சமூகப் பாதுகாப்பு, குடும்பம் என்ற பிணைப்பைக் கொண்டது இச்சமுதாய முன்னேற்ற சங்கமும் இதன் வழியில் சென்று வாகை சூட வாழ்த்துகிறேன்.
நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயில்களும் திறந்து வரவேற்கும், அப்படிப்பட்ட இக்குழுமத்தை வாழ்த்துகிறேன்.
உள்ளம் ஒரு முடிவுக்கு வந்து விட்டால்
உடல் என்ன உலகமே நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
                                                                - கண்ணதாசன்
        என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப, களத்தில் இறங்கியிருக்கும் அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துகிறேன்.
        நட்பு உண்டாவதற்கு அன்பு மட்டும் போதாது, இலட்சிய ஒற்றுமையும் வேண்டும். இந்த ஒற்றுமையை நாம் இன்று கண்டோம். என்றும் வாழ்க !
        மேலும், காமராசரின் புகழ் ஓங்க அவர் வழியில் நடப்போம்............
                   வரப்புயர நீர் உயரும்,
                நீர் உயர நெல் உயரும்,
                நெல் உயர குடி உயரும்,
                குடி உயர கோல் உயரும்,
                கோல் உயர கோன் உயரும்.


நன்றி! நன்றி! நன்றி!
                                                                    ப. சித்ரகலா கலைச்செல்வன்

No comments:

Post a Comment

Translate