Search This Blog

Wednesday, December 28, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

 தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! இன்னுமா விடியவில்லை ?
படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்) தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ?
 தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம். கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும் போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.  வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !


ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில கையாய்).

No comments:

Post a Comment

Translate