Search This Blog

Monday, October 1, 2018

வேண்டாமே போதை...




வேண்டாமே போதை???!!!!
எது வேண்டும்? எது வேண்டாம்? என்பதைப் பகுத்தறிவதே ஆறறிவு. எது நல்லது? எது கெட்டது என்பதை பிரித்தறியத் தெரிவதே நல்ல பண்பு. எது தேவை? எது தேவையற்றது? என்பதைத் தீர்மானிப்பதே  நற்காரணிகள். இந்த வரிசையில், வேண்டாம் என்ற வரிசையில் என் கண்களுக்கு முக்கியமாகப்படுவது போதை. அதற்காக, மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகளை முன்மொழிய நான் இங்கு வரவில்லை. வலியோடு, வாழ்வில் வளமிலா, உயிர் நாடி இழந்து அனு அனுவாய் அணுக்களை அழித்துக் கொண்டிருக்கும் என் சகோதரர்கள், சான்றோர்களாய் மாறவில்லையெனினும் சாமானிய மனிதனாக மண்ணில் நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக, இச்சகோதரின் குரல் உங்கள் முன் ஒலிக்கக் தொடங்குகிறது. ஜோராக, இல்லையெனிலும் ஜோயலின் குரலாக, குலம் தழைக்க ஒலிக்கும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆம்! வேதனைதான்  தேவையா? வேண்டாமே போதையே? என்று குமுறுகிறது என் குரல் வளை. இன்றைய இளைஞர்கள் போதையின் தாக்கத்தினால்  சொர்க்கமா? நரகமா? பூரணமா? மரணமா? என்று புத்தி பேதலித்துப் போதைக்கு அடிமையாவது குறித்து ஒவ்வொருவரும் வேறு வேறு காரணங்களைக் காட்டுகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.  உடம்பான் அழியின் உயிரால் அழிவர்.உடம்பை  வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே என்கிறார் திருமூலர். பணத்தை இழந்தால் சம்பாதிக்க முடியும். உடல் நலத்தை இழந்தால்??? உடல் நலத்தையும் அதனால் ஏற்படும் தனி மனித இழப்பையும் கண்டு வெம்பி விசும்பதை விடுத்து விருட்சம் கொள்வோம். விடியலுக்கு வழிவகை வகுப்போம் வேண்டாமே போதை என்று. கொஞ்ச நாள்களாக வேதனை தரும் செய்தி என்னவெனில், போதை சாக்லேட், இது எதிர்கால மாணவர்களின் இக்கால ஈர்ப்பு .. எதற்காக பள்ளிக்கூடம் வருகிறோம் என்ற சின்ன கவனம் கூட இல்லாமல், பொழுது போக்குக்காகவும், போதைக்காகவுமாக மாறி இருக்கிறது பள்ளி வாழ்க்கை  பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பாமரர்கள் அவர்கள் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் மட்ட ரக போதைப் பொருட்களைச் சிறு வயதில் நட்பு வட்டாரத்தின் மூலம் பழகி பின்பு அதற்கு நிரந்தர அடிமையாகின்றனர். படித்த, மேல்மட்டத்தினர் தகுதிக்கு ஏற்றவாறு அதிக விலையுள்ள போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இந்தியாவில் 2 சதவீத மாணவர்கள் நிரந்தர அடிமைகள் என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது. தடுப்பு மற்றும் ஒழிப்பு- உலகின் போதை மருந்து விற்பனையாளர்களின் நெட் ஒர்க் 76 நாடுகளில் பரந்துள்ளது. சாதாரண கூலித்தொழிலாளி முதல் புகழ்பெற்ற, புகழேந்தியர் வரை இந்த வியாபாரத்தில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகி வருவது வேதனை தரும் செய்தி மட்டுமல்ல; வெட்கக் கேடானதும் கூட..  போதை புகையிலை மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தாக்கம் அதிகம். 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மதுவினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 1992-- ஆண்டுகளில் எடுத்த கணக்கெடுப்பின்படி 55% க்கும் மேல்  மதுப் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.  இந்த சதவீதம் இன்னும் கூடிக்கொண்டு இருக்கிறது. ஒருவர் இந்தியாவில் சராசரியாக ஒரு ஆண்டில் 33 லிட்டர் மதுபானம் அருந்துகிறார். மது அருந்துவதால் 60 வித வியாதிகள் வருகின்றன. 20- முதல் 50 சதவீதம் குடிகாரர்கள் மஞ்சள் காமாலை, வலிப்பு, விபத்து மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஹெராயின் போதைக்கு 34 லட்சம் பேர் அடிமையாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சராசரியாக தினமும் 7 பேர் இறக்கிறார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது கிராமம், நகரம் என்றில்லாமல் அழிவை நோக்கி இப்போதை வருத்திக் கொண்டிருக்கிறது.  எது, இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினால் அதற்கு இரண்டே தீர்வுகள் உள்ளன. ஒன்று, தானாகத் திருந்துவது, இல்லை, பெற்றோர்கள் திருத்துவது. அதாவது, திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனபதை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் போதையின் பிடியிலிருந்து வெளிவரவில்லையெனில் அவனுக்கு அவனே கொள்ளி வைத்துக் கொள்கிறான் என்பதே பொருள். இல்லையெனில், பெற்றோரின் வளர்ப்பு முறையில் கவனம் வேண்டும். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே. வளர்ப்பதில் குற்றம் கூற நான் முற்படவில்லை. வளர்ச்சியை செம்மைப் படுத்தத் தவறி விடுகிறார்கள் என்பதே என் வாதம்.  தன் ஒழுக்கம் மேன்மையைத் தருவதால் அதுவே உயிரினும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது என்பதை வள்ளுவர்,' ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்' என்கிறார்.
பள்ளி, கல்லுாரிகளில் முன்பு இருந்து வந்த நன்னெறி வகுப்புகள் இன்று மறைந்து பிறருக்கு தெரியாமல் இரகசியமாகக் கெட்டுப் போகும் வாய்ப்புகளை கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களுமே தருவதால் விளக்கை நாடும் விட்டில் பூச்சிகளாய் ஆசையில் மோசம் போய் விடுகின்றனர். புற்று நோய், இதய நோய், பால்வினை நோய் போன்றவைகளுக்கு போதை வஸ்துக்களே காரணம். தீயொழுக்கம் தனி மனிதனுக்கு மட்டுமல்ல அது சமுதாயம் முழுமைக்கும் என்றும் துன்பம் தருவதாகும். பொருள், காலம், உடல் விரயம் செய்து மனம் காணும் சுகம் எத்தனை நாளோ? வேண்டாமே போதை. என்றும் நடப்போம் நல்ல பாதை.   நம்  தமிழர்கள் எண்ணெய்க்கிணறு திட்டம் வேண்டாம், ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம், எரிவாய்வு ஆய்வு வேண்டாம்,குளச்சல் துறைமுகம் வேண்டாம், கூடங்குளம் வேண்டாம்,கல்பாக்கம் வேண்டாம், நதி நீர் இணைப்பு வேண்டாம், ஹிந்தி வேண்டாம், நீட் என்று நீட்ட வேண்டாம், நவோதயா பள்ளியும் வேண்டாம் ..அப்ப்ப்பா எத்தனை வேண்டாம் வேண்டாம்... ஆனால், எனக்கு இந்த வேண்டாமை விட போதை வேண்டாம் வேண்டாமென பதை பதைக்கிறது என் பவள வாய்ச் சித்திரங்கள். இந்தியா வல்லரசாவது, இளைஞர்களின் கையில் என, அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தவர், அப்துல் கலாம். அப்படிப்பட்ட இளைஞர்களின் மத்தியில்,  போதை பழக்கத்தை உருவாக்கி, அவர்களது வாழ்வையே அழித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது நாட்டின் வளர்ச்சியையும் சீர்குலைக்கின்றனர். தமிழனே! தலைமகனே எனக்கு வேண்டியதெல்லாம் வேண்டாமே வேண்டாமே என்பதே. நீவிர் சிந்திப்பீர்..உங்களுக்கு என்ன வேண்டுமென்பதை சொல் மனமே! கனவுகளும் கற்பனைகளும் வாழ்வைத் தராது, எது வேண்டும் வேண்டாமென சிந்தித்து செயலாற்று மனமே. இந்த நாளும் அல்ல எந்த நாளும் வேண்டாமே போதை! வேண்டாமே ! வேண்டாமே!
பகட்டுத் தனமாக வாழ்ந்து விடலாமென
குருட்டுத்தனமான நம்பிக்கையுடன்
அசட்டுத் தனமாக இருந்து விடாதே
வாழ்க்கை இருட்டிப் போய்விடும்.
நன்றி.

No comments:

Post a Comment

Translate