Search This Blog

Monday, October 1, 2018

தமிழ்த்தாயே!!!!



தாய்க்குத் தாலாட்டுப் பாடுவது
ஒரு சிலரின் தனிச் சிறப்பு….
தாய்த் தமிழுக்குத் தாலாட்டுப் பாடுவது
பண்டிதர்களின் பழஞ்சிறப்பு
தாய்நாட்டிற்கு வாழ்த்துப் பாடுவது
விஞ்சியோரின் பெருஞ்சிறப்பு. – இதைவிட
என் தமிழ்த் தாய்க்கு நான் எழுதும்
இக்கவிதையே என் சிறப்பு!
தமிழே! தாயே!
கருவறையில் எமை பள்ளி கொள்ளச் செய்ததும் நீயே!
கார்மேகமாய் கவிதை மழை அளிப்பவளும் நீயே!
குமரிக் கண்டத்தின் முதல் தோற்றமும் நீயே!
கூடலழகரின் முதன்மைத் தாயும் நீயே!
முத்துக் குளித்த தென்மதுரையில்
வளர்ந்தவளும் நீயே!
மூதாதையரின் வழித் தோன்றலுக்குத்
தாயானவளும் நீயே!
 நக்கீரனின் நாவினில் உழன்றவளும் நீயே!
பிறப்பு முதல் இறப்பு வரை
பரிணாம வளர்ச்சியாய்
 பவனி வந்தவளும் நீயே!
பல நாடுகள் கடந்து பயணிப்பவளும் நீயே! நீயே!!
தாயே!!! என் தமிழ்த்தாயே!!! – என்னை
காதல் மொழி பாட வைத்தவளும் நீயே!
காதலுக்குத் தூது சென்றவளும் நீயே!
கவிதை எழுத வைத்தவளும் நீயே!
என் காதலன் நாவினில் தமிழ்த்தாய்
என நவின்றவளும் நீயே!
உம்மேல் பித்தன்போல்
அலைய வைத்தவளும் நீயே!
பிதாமகனை எனக்கு
அறிமுகம் செய்தவளும் நீயே!!
உடல், பொருள் ஆவியாய்
உழல்பவளும் நீயே!
உணர்வாய், உறவாய் என்னுள்
உறைந்திருப்பவளும்   நீயே!
உனக்கு அரியாசனம் அமைக்க எம்மை
இணைத்தவளும் நீயே!
ஊழ்வினைப் பாராது உதவ
எங்களுக்கு உந்துதலாய்
 இருப்பவளும் நீயே!
உண்மையின் உருவத்தை
அடையாளம் காட்டியவளும் நீயே!
தரணியில் நான் வாழ
தலைவனை எனக்குத் தந்தவளும் நீயே!
என் உயிரே!! உடலே!!!
நீயே!!!  நீயே!! – என்றும் என்றென்றும்
என் தாகத்தைத் தணிக்கும் தமிழ்த்தாயே!!!!

                               சித்ரா K ஆகாஷ்.

No comments:

Post a Comment

Translate