Search This Blog

Sunday, January 2, 2011

மார்கழி 18- பாடல்+பொருள்


நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன்மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"மதம் கொண்ட யானையைப்போல வலிமையுடையவரும், படைவரைக்கண்டு பின்வாங்காத தோள்வலிமையுடையவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தலுள்ள நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத்திற! கோழிகள் கூவுவதைக்கேள்! கொடிகள் படர்ந்த பந்தல் மேலமர்ந்து, குயில்கள் கூவுவதைக்கேள்! மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் பாட வந்துள்ளோம். எனவே உன் சிவந்த தாமரைப் பூக்கள் போன்ற மெதுவான கையினால், கைவளையல்கள் ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறவாய்!"

No comments:

Post a Comment

Translate